மூன்று இடங்களுக்கு நான் போவதற்கு
சிறிய பயம் கலந்த தயக்கம்
எப்போதுமே உண்டு
காவல்நிலையம்
வெறும் சொற்களோடு நிற்கிறது
காவல்துறை உங்கள் நண்பன் என்று
ஏனோ அதன் சுவரை எட்டி பார்க்கும்போது
ஒரு அச்சமும் எட்டி பார்க்கிறது
அதன் ஒவ்வொரு செங்கல்லும்
ஒரு நிஜக்கதையோடு புதைக்கப்பட்டதுபோலிருக்கிறது
விண்ணப்பம் கொடுக்க வந்த
விதவை பெண் கற்பழிப்பு
அடித்தே கொல்லப்பட்ட தந்தை மகன்
புகார் கொடுக்கவந்தவர்களையே கைது செய்வது
சட்டத்தின் ஓட்டைவழியே
ஒவ்வொருவரையும் அணுகுவது
என நிறைய காரணிகள் நினைவில் வந்து போகும்
படித்த , நமக்கே இந்த நிலையினில்
படிக்காதவர்கள் நிலை
அடுத்து மருத்துவமனை
அதன் வாசமே ஒருவித நோயை சுவாசிப்பதுபோலிருக்கும்
வர்த்தக வளாகம் போல அதன் வடிவம் இருக்கும்
இளம் மருத்துவர்களின் ஆராய்ச்சிக்கூடம் போலவும் இருக்கும்
எண்ணற்ற உயிர்களை காப்பாறினாலும்
உயிரோட்டமில்லாது ஒரு உணர்வு அதன்
உள் நுழைகையில் வருகிறது
அடுத்ததாக அரசு அலுவலங்கள்
அதன் கட்டிடம் ஊழல் என்னும் வர்ணம்
தீட்டப்பட்டதை எந்த நிற குறைபாடு
உள்ளவராலும் உணர்ந்துகொள்ளலாம்
உங்களை ஒரு சோம்பேறித்தனம் தொற்றிக்கொள்ளலாம்
வந்த காரியத்தை நினைத்து நொந்து போகலாம்
அலைக்கழிக்கப்பட்டு ஒரு மூலையில்
அமர்த்தப்பட்டு இருக்கலாம்
வருபவர் போவரால் அலட்சியப்படுத்தப்பட்டு இருக்கலாம்
இதன் எந்த சுவடுமே கவனிக்கப்படாமல்
அலைபேசியில் அந்த அரசு அலுவலர்
அமிழ்ந்து போயிருக்கலாம்..
இன்மூன்றின் வழித்தடங்களையும்
மனது மறந்துவிடவே விரும்புகிறது