குழந்தையுமல்ல, குமரியுமல்ல
இரண்டுக்கும் இடைப்பட்ட பருவம்..
மிதிவண்டியில் முன்னால் ஒரு கூடை
கூடையில் அவளுடைய சேமிப்புகள், கொஞ்சம் சிரிப்புகள்
அடிக்கடி அவளை அங்கு பார்க்கலாம்
நடைபாதை கடைகளில் பேரம்பேசுவாள்!
தூரம் நின்று எதையோ ரசிப்பாள்!
விரல்களால் காற்றை விசைப்பலகையாக்குவாள்!
அறியாதவர்க்கு இசையின் பிள்ளையாய் தெரிவாள்!
யாரோ ஒருவரின் கூக்குரலுக்கு
மௌனத்தின் குரலை மறுமொழியாக்கினாள் !
அப்போதுதான் கவனித்தேன்
அவள் காதுகேளாத வாய்
பேசமுடியாத பெண்!
உலகின் தலைசிறந்த மொழியை
தாய்மொழியை கொண்ட அவள்
கடந்து போன போது
கோவில் கருவறையின் வாசனை
கடவுளின் பிள்ளையல்லவா !
No comments:
Post a Comment