Thursday, May 7, 2009

பெரிசுகள்


ஊரோரம் ஒதுக்குப்புரம்
கூரைமேஞ்ச ஒரு முன்னாள் டீக்கடை
கயிறு பின்னிய கட்டில்ல ஒரு பெரிசு
கல்லுத்திண்டுல இன்னொரு பெரிசு..

நெற்றி கோடுகள் வயதை
அறிவித்துக்கொண்டிருந்தன
எலும்புகளை பார்க்க இனி
எக்ஸ்ரே தேவைப்படாது.
இடுப்பில் ஒரே ஒரு துண்டு
மானத்தை மறைப்பதற்காக இல்லை
குளத்தங்கரையில் துவட்டுவதற்காக..

கருவமரத்தை அவரே வெட்டி செதுக்கிய
கைத்தடி ஒன்று
மகன் மறந்துவிட்டால் கடைசியில்
மிஞ்சுவது இது மட்டுமே..

பெரிசுகள் இருவரும்
பழசை அசைபோட்டனர்
பக்கத்து ஊர் கொட்டகையில்
படம் பார்த்த கதை
ஒன்பது வயதில்
ஓணான் விரட்டிய கதை
புதுசாய் போட்ட ரோடு
பழசான வரப்பு மேடு
வயக்காட்டு சண்டை என
வாய்வலிக்காமல் பேசிக்கொண்டனர்..

பேச்சு நிகழ் காலத்தை
நெருங்கியது..

மகனோடு பேசுறதில்லையா?
மருமக வந்ததிலுருந்து..
மக இருக்க..? வருமா?
அப்பப்ப வரும்..மாமியார் சரியில்லையாம்..
கஞ்சிக்கு?..
...!?

கட்டிலுக்கடியில் அவர் வளர்த்த
நாய் ஒன்று நன்றியோடு கிடந்தது..
இப்ப கஞ்சி கிடைக்கலனாலும்
எப்பவோ போட்ட கஞ்சிக்காக..

1 comment: